ஆழ்வார்ப்பேட்டை கலைஞர்

சென்னை நகரில் ஆழ்வார்ப்பேட்டை கொஞ்சம் வசதியான பகுதி. அங்கே எல்டாம்ச் ரோடு முனையில் இருந்தது குமாரசாமி ஆட்டோமொபைல்ஸ். அடையாரில் இருந்து நண்பர் சித்தார்த்தன் துணையோடு ஆழ்வார்ப்பேட்டை போனேன். காரணம் நான் அப்போது எழுதிக் கொண்டிருந்த அறிவியல் கதைக்குச் சில விவரங்கள் தேவைப்பட்டன. 
வெளிநாட்டுப் படப்பிடிப்புக் குழு ஒன்று தென்னிந்திய கிராமத்தில் நுழைகிறது. அவர்கள் பர்வையில் எதெல்லாம் தென்படும் என்பதை நான் கதையில்  விவிரிக்க வேண்டும். அதற்காகத்தான் அடையாரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டை பயணம். 
குமாரசாமி ஆட்டோமொபைல்ஸ் காம்பவுண்ட் சுவரில் ஐந்து வாலிபர்கள். ஐந்து பேரும் திரைப்படக் கல்லூரி மாணவர்க்பள். சித்தார்த்தன் என்னை அறிமுகம் செய்தார். உயரமாக , கண்ணாடி அணிந்து ஒருக்களித்த கிராப்புடன் இருந்தவரை ஓரங்க்கட்டினேன்.
மற்றவர்களை விட்டு நாங்கள் நடக்கத் தொடங்குகிறோம். அவர் கவிதா ஓட்டல் செடிகொடிகளை ஆராய்ந்து கொண்டே வந்தார். நான் துவக்கத்திலிருந்து காமிராக் கலைஞன் வரை கதை சொல்லிக் கொண்டே வந்தேன். அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. 
“ முதலில் புழுதி தாங்க தெரியும். கிராமத்து எல்லையில் பசங்களைத் தாண்டும் வண்டி. அவர்கள் சத்தம் போட்டுக் கொண்டே கோவணம் பறக்கப் புழுதிக்கு நடுவே ஓடி வருவாங்க எனக்கு சொல்கிறரா, தனக்குச் சொல்லிக் கொள்கிறரா ? என்று இனம் பிரிக்க முடியவில்லை. இந்த மூன்று வரியை சர்வ நிதானமாக ஏகப்பட்ட இடைவெளியோடு சொல்லி முடித்தபோது வைஜயந்திமாலா வீடு வலது புறம் திரும்பினோம். 
சற்று நேரம் மெளனம். ஏதாவது சொல்ல வரும் போது குறுக்கே பேசிவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக மெளனமாயிருந்து விட்டேன். அதற்கு அவசியமில்லை. அவர் வேறு  லோகத்திலிருந்தார். கவிதை எழுத முயலும் பாரதியார் போல் நண்பர் நடை. கழுத்தைச் சாய்த்திருந்தார். ஏதாவது போதை சாப்பிட்டிருப்பாரோ? தப்பு நம்முடையது. மனதில் வந்த்தை எழுத வேண்டியதுதானே. இவ்வளவு சிரமப்பட்டு விவரம் சேகரிக்க வேண்டியதில்லை.என்று யோசனை ஓடியது. நண்பருக்குப் பிரக்ஞை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிளட்பாரத்து எருமை மீது மோதாமல் லாகவமாக ஒதுங்கிக் கொண்டார். மெளப்ரீஸ் ரோடு வந்தாயிற்று. நண்பர் உடல் தன்னிச்சையாகத் திரும்பியது. 
 துணிந்து , பசங்க ஓடி வராங்க. அப்புறம் ? “ என்றேன்.“ கிராமத்து ரோடு அதிரும் . காமிரா பார்வை குலுங்கும் . வளையும் . தெருவில் கோழி  டயருக்குத் தப்பும். , கதவிடுக்கில் இளம்பெண். திரும்பவும் கழுத்துச் சாய்ப்பு. எக்குத்தப்பான நடை. தனக்கு முன்னாலிருந்த வெற்றிட்த்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். சாலையில் விரையும் வாகனங்களின் சத்தம் என்னைக் கலைத்த்து. நமக்குப் பிரயோஜனம் இல்லை என்று விட்டு விட்டேன்.மீண்டும் குமாரசாமி குட்டிச்சுவர். அவர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். “ அற்புதமான கதை “ என்றார் நண்பர். 
 கொஞ்ச நேரம் கழித்துப் புறப்பட்டோம் நானும் சித்தார்த்தனும். 5-ஆம் நம்பர் பஸ்ஸில் தொத்திக் கொண்டோம். ஓடுகின்ற பஸ்ஸிலிருந்து திரும்பிப் பர்த்தால் குட்டிச் சுவரில் அந்தக் காமிரா நண்பர் பி.சி. ஸ்ரீராமும் மற்றவர்களும். 



0 comments:

Post a Comment