ஆரியம், திராவிடம் – இலக்கிய ஆதாரங்கள்


சங்கப் பலகை / 26 11 2011 /
அனைவருக்கும் வணக்கம் .
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும்.
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும்., அல்லது ஆரிய இனமாக இருக்கும்.
ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன ? திராவிட இனம் என்றல் என்ன?
இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும்  பொருள் எது ? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்த அமர்வு. அறிஞர்களும், ஆர்வலர்களும்  நிறைந்துள்ள இந்த அவையில் , இது தொடர்பாக சில சான்றுகளை முன் வைக்கிறேன்.
முதலில் ஆரியம் .
நம்முடைய வரலாற்றில் தொன்மையானதாகக் கருத்தப்படும் வேதங்களில் ஆரியம் இருக்கிறதா?
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் ஆரிய இனத்தவருக்கும் மற்றொரு இனத்தவருக்கும் இடையே நடந்தவை என்ற கருத்து திராவிட
இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படுகிறது.
இது தவறான கருத்து.
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள்.
ஆரியர், அஸுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர். அம்பேத்கர் கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும்.: “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை.”
ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் என்றும் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது.
இதுவும் தவறு.
வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிறமுடையவர்களாக இருந்திருக்கிறர்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் ( 10 : 31 : 11) இருக்கிறது.
இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும் , யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கருப்பு. பாஞ்சாலியின் இயற்பெயரான கிருஷ்ணா கருப்பு நிறத்தைக் குறிக்கிறது.
வேதங்களில் திராவிடஎன்ற சொல் இல்லை.
தமிழ் நூல்களில் குறுந்தொகையில் ( 7 : 3: 5) மேள ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
 ”………………………………………………………………………………………………….. ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகைவெண் நெற்றொலிக்கும் என்கிறது குறுந்தொகை..
திருநாவுக்கரசர் தேவராத்தில் ( கி.பி. ஏழாம் நூற்றாண்டு) , இறைவன் வடமொழியும் தென்மொழித் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர்; சாத்விக குணத்தோடு சிவசிந்தனையோடு இருக்கும் ஞானிகளுடைய சொல்லாக விளங்குபவர்  என்று எழுதப்பட்டுள்ளது. ஆரியம் தமிழோடிசையானவன் கூரிய குணத்தார் குறிநின்றவன் என்பது திருநாவுக்கரசர் பாடல் (. 176)
மாணிக்கவாசகர்,( கி பி எட்டாம் நூற்றாண்டு)ஆசாரியன் என்ற பொருள்பட சிவ புராணத்தில்  பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே “ (64)
என்று பாடுகிறார்.
பிறகு, கம்பராமாயணம் ( கிபி பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில், ”இற்றைநாள்வரை முதலியான் முன்செய்தன குற்றமு முளவெனிற் பொறுத்தி கொற்றவ ;அற்றதான் முகத்தினில் விழித்தல் ஆரிய ! பெற்றனன் விடையெனப் பெயர்ந்து போயினான்.” (.ரா.யு.கா.
 கும்ப.கர்ணன் வதைப் ப.டலம் ) . என்று வருகிறதுஇந்த இடத்தில், உரையாசிரியர்கள் ஆரிய என்பதைத் தலைவன்என்று எழுதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் ( 1370—1443) ”வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை- ஆர்த்தபுகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” ( உபதேச ரத்ன மாலை) என்று எழுதுகிறார்.
வேதாந்த தேசிகர்(1269—1370, “காண்பனவு முரைப்பனவு மற்றொன்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற் பாண்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம் நாம் பெரியோமல்லோம் நாம் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே “ ( அம்ருதாஸ்வாதி - 37) என்கிறார்.. இங்கே ‘ஆரியன்’ என்பதை ’சிறப்புடையவன்’ என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம் , ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது. ’ திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’(1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார், இதை இன அடையாளமாக மாற்றினார்.
கால்டுவெல் வழி வந்த சி. என். அண்ணதுரை, ’ஆரிய மாயை ‘(1943) என்ற புத்தகத்தில், “ நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணீயமாக ஓடிக் -- கொண்டிருக்கிறது என்பதைச் சரித்திரம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்” (ப..26) என்று எழுதினார்.
பூகோளப் படத்தைப் பார்த்தாலே மத்தியப் பிரதேசத்தின் தெற்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதி, மகாராஷ்ட்ரம் ஆகியவை நர்மதையின் தெற்கே உள்ளன என்று தெரிந்து விடும். சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோடியும் திராவிடர்களா என்பதை அண்ணாவின் தம்பிகள்தாம் விளக்க வேண்டும்.
அடுத்தது திராவிடம்.
’திராவிடம்’ என்ற பொருளில் ’த்ரமிடம்’ என்ற சொல்  பாகவதத்தில்
(8-5-49) வருகிறது.
தமிழைக் குறிக்க ஸம்ஸ்கிருதத்தில் ”த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘ தாமரி ’ என்று எழுதினார். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ’தமிரிசி’ என்று எழுதினார். இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள்,  முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும், தமிழகத்தையும் ’மலபார்’ என்றே அழைத்தார்கள்.
எனவே, தமிழ் திராவிடமாக ஒலிக்க வாய்ப்புகள் இருந்தன.
சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை..
பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில்  திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும், சோழ தேசத்திற்கு வடக்கிலும் , கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது. இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
வேதாந்த தேசிகர் ‘ த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறர்.
தாயுமானவர், ( பதினெட்டாம் நூற்றாண்டு)  ”…………. வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்”  (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறர்.
வேதாந்த தேசிகரும், தாயுமானவரும் ‘திராவிடம்’ என்ற சொல்லை, ‘தமிழ்’ என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் , தென்னிந்திய மொழிகளை, ‘ திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர்( 1777 – 1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது.
இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப் பட்டது.
’தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி , சுய மரியாதை இயக்கம் , நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான். இந்த இயக்கங்களின் அடிப்படை, கால்டுவெல்லின் கற்பனையில் உருவான ’திராவிட இனம் ‘ என்ற கருத்தாக்கம்தான்..
கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம் :
P.viii.. Psamls of a Saiva Saint / T Isacc Thambiah/ London. Luzee & Co./1925.
A matter of convenience  became a factor of mischief.; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils, to allied people in inferior grades of culture.
The responsibility is Bishop Caldwell’s . The wrong done to those, to whom alone the dravidian language belongs ,is aggregated  by employing a philological convention  as an  ethnological  distinction. The Caldwell terminology is unscientific and unsatisfactory
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக
அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார்.
ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும் , சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவக்கி வைத்ததுதான் திராவிட இனவாதம் . ஈ வெ ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்து விட்டது. இனவாதம் இயக்கமானது.   
ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது. திரைப்படப். பாட்டுப் புத்தகங்களும், இசைத்தட்டுகளும் கிராமங்கள் தோறும் ஊடுருவிய நிலையில், கலை வாழும் தென்னாடும், திராவிடப் பொன்னாடும்  பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது.
தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில் , ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்து விட்டது. இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப் படுகிறது.
நிறைவாக, இலக்கியமல்லாத ஒரு சான்றையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மற்றும்  நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா  ஆகியோர் வழங்கிய தீர்ப்பில்
திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும். “
-- ஜனவரி 5, 2011
என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் ஆரியம் திராவிடம் பற்றிய இலக்கிய ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறேன். 
வணக்கம்.
இது பற்றி மேலும் அறிய :
1. புராதன  இந்தியா என்னும் 56 தேசங்கள்,  பி. வி. ஜகதீச ஐயர், 1918,   
   சந்தியா பதிப்பகம், 2009. 
2.  மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு,
   கே வி. ராமகிருஷ்ண ராவ், திராவிடச் சான்றோர் பேரவை, 2009.

0 comments:

Post a Comment